Sunday, March 14, 2010

நித்யானந்தம்

கதவைத்திற காற்று வரட்டும்
ஆத்மாவைத்திற ஆனந்தம் வரட்டும்
இப்படியெல்லாம்
நித்தமும் திறக்கச் சொன்னவர்
வந்தார்
தொலைக்காட்சியைத்
திறந்தால்
நடிகையைத்
திறந்தபடி...

உறவை விலகு...

துறவை ஒழுகு...
ஊடகங்களில் விரிகிறது
உபதேசிப்போர் அழகு...?

ஆசைகளைத்
துறப்பதற்கல்ல...
நிறைவேற்றிக்கொள்ள
குறுக்கு வழியானதோ
ஆன்மீகம்...?

ஜகத்குரு தான்
இதில்
ஜகத்திற்கே குரு...
அடியொற்றி
வளரும்
அனைவரும்
அவர் உரு...

இவர்கள்
வெளிச்சத்தில்
காவிகளோடு...
இருட்டில்
தேவிகளோடு...

அச்சம், மடம்
பெண்களின்
குணங்களாம்
பெண்களுக்கு
இப்போது
மடம் என்றாலே
அச்சம்...

ஒரு காவி
ஒரு தேவி
ஒரு டிவி
ஒரு மூவி
மனிதா எங்கே உன்
பகுத்தறிவின் சாவி...

அங்கே
அச்சத்தில் ஒருவன்
அலறுகிறான்
மாமிகளே ஒளியுங்கள்
சுவாமிகள் வருகிறார்கள்...

தீட்சை பெறுவோரே
தெளிவு பெறுக...
நித்யானந்தர்களிடம் இல்லை
நிஜமான ஆன்மீகம்
ஆனால்
நிஜமான ஆன்மீகத்தில்
உண்டு
நித்யானந்தம்... (நிரந்தர ஆனந்தம்)

பெண்துணையே
பெரும்பாவம் என்போர்
வாழ்கிறார்கள்
பெண்களின் துணையோடு...
ஆண்துணை மறுப்போரும்
அப்படியே...

இல்லறமல்லது
நல்லற மன்று...
இவ்வாறு
இயம்பும்
இறைக்கொள்கை ஒன்று...
அதை
ஏற்றுப்போற்றுதல்
எல்லோர்க்கும் நன்று...

-ஹாஜாகனி

http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=418:nidyananda&catid=82:indiia&Itemid=199