Saturday, December 17, 2011



எழும்பும் உணர்வுகள், வீழும் நடுநிலைமை, சென்னை செய்தியறைகளில் முல்லைப் பெரியாறு குறித்த செய்திகளின் பின்னணியில் உள்ள உண்மை
ஆங்கிலத்தில் - ராதிகா கிரி
தமிழில் - பூங்குழலி
முல்லைப் பெரியாறு அணை விசயம் குறித்து ப‌ல்வேறு ஆங்கில செய்தி ஏடுகளில் அண்மையில் கிளம்பியுள்ள செய்திகளைத் தொடர்ந்து நெருக்கமாக கவனித்ததில், கேரளத்திலிருந்து வரும் செய்தியாளர்களின் தொழில் நேர்மை குறித்து எனக்கு முக்கிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.
mullai_periyar_370மலையாள செய்தி ஏடுகளில் எழுதும் செய்தியாளர்கள், உண்மையைப் பற்றிய அக்கறையின்றி மாநில அரசின் பார்வையையும் உள்ளுர் மக்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்த முற்பட்டுள்ளனர் என்பது வேறு செய்தி. ஆனால் ஆங்கில ஊடகங்களுக்காக அதுவும் தமிழ்நாட்டில் பணியாற்றும் மலையாள செய்தியாளர்கள் அதையே செய்யும்போது நிச்சயம் அது கவனிக்கத்தக்க விசயமாகும்.
செய்தியாளர்களின் தொழில் நேர்மையில் அண்மையில் ஏற்பட்டுள்ள சரிவு என்பது, கேரள அட்வகேட் ஜெனரல் கே.பி.தண்டபாணி நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கூட, அதற்கு கீழ்ப் பகுதியில் உள்ள இடுக்கி மற்றும் பிற அணைகளில் நீர் தேங்கும் என சொல்லியிருப்பதை செய்தியாக்கியிருக்கும் விதத்தில் தெரிகிறது.
அவ்வறிக்கை அளித்த மறுநாள், சென்னையைச் சேர்ந்த எந்த ஆங்கில நாளிதழும் அச்செய்தியை வெளியிடவில்லை. மலையாளிகள் தாங்கள் அபத்தம் என்றும் ஏற்றுக் கொள்ள முடியாததும் என்று கருதிய அவ்வறிக்கையை எதிர்த்து அட்வகேட் ஜெனரலுக்கு எதிராக கை உயர்த்தி கிளம்பிய பிறகே அச்செய்தி வெளிவந்தது. அதுவும் அவ்வறிக்கை எழுப்பிய சர்ச்சையின் அடிப்படையில் மட்டுமே.
நான் குறிப்பிட விரும்பும் செய்தி என்னவெனில், கேரளத்தைச் சேர்ந்த எந்த ஒரு செய்தியாளருக்கும் அட்வகேட் ஜெனரலின் அறிக்கை செய்தியளிக்கத் தகுந்ததாக படவில்லை - அதை ஒப்புக்கொள்ள விரும்புவார்களா அல்லது பொய்யென ஒதுக்குவார்களா என்பது வேறு விசயம்.
வேறு விதத்தில் குறிப்பிட வேண்டுமெனில், மலையாள செய்தியாளர்கள், தங்களின் பணி சார்ந்தும் கூட, தங்களை முதலில் மலையாளிகளாகவும் பின்பே செய்தியாளர்களாகவும் கருதுகிறார்கள்.
கடந்த இரண்டு வாரங்களாக நடந்தவற்றை நுணுக்கமாக ஆராய என்னைத் தூண்டியது, டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை பதிப்பு, நவம்பர் 24 அன்று வெளியிட்ட டைம்ஸ் வியூ (Times View) எனும் செய்திதான்.
அச்செய்தியின் கீழிருந்த கருத்துப் பகுதியில், 'தமிழ்நாட்டு திரையரங்குகள் எதிர்ப்புக்குத் தலைவணங்கி டாம்999 படத்தை திரும்பப் பெற்றன' என்று மிகவும் நல்லவிதமாக கருத்துரிமைக்கு மதிப்பளித்து தொடங்கியுள்ளது. ஆனால் வெடிகுண்டு மூன்றாவது வரியில் இருந்தது. 'ஒப்புக்கொள்ளவேண்டியது என்னவெனில், முல்லாப் பெரியாறு அணை ஓர் உணர்ச்சிகரமான சிக்கல். தென் மாவட்டங்களில் வாழும் மக்களிடையே ஆதரவினைப் பெற அரசியல் கட்சிகள் அதைப் பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்கின்றன." என்று கூறியது.
முல்லைப் பெரியாறு ('அய்' விகுதி இல்லாமல் 'முல்லாப் பெரியாறு' என்பது அப்பட்டமான மலையாள உச்சரிப்பு. இதையே டைம்ஸ் ஆப் இந்தியா பயன்படுத்த விழைகிறது) கேரளத்தில்தான் உணர்ச்சிகரமான விசயம்; தமிழ்நாட்டில் அல்ல. ஆனால், திட்டமிட்ட முறையில் தாங்கள் பரப்பும் பொய்யான செய்திகள் மூலம் கேரள அரசு, செய்தியாளர்கள் மற்றும் மக்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து அதனை இங்கும் உணர்ச்சிகரமான சிக்கலாக்கி விடலாம்.
எனவே, சந்தேகத்திற்கு இடமின்றி, அச்செய்தியாளர் சென்னையில் வசித்தாலும் கூட டைம்ஸ் வியூ வெளியிட்ட செய்தி மலையாள பார்வையிலானதே ஆகும்.
சென்னையில் உள்ள டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தி அறையின் கட்டமைப்புப் பற்றி ஊடகத் துறை குறித்த உள்ளீடுப் பார்வை கொண்ட எவருக்கும் தெரியும். அந்நாளிதழின் அனைத்து முக்கிய பதவிகளிலும் மலையாளிகளே உள்ளனர் - ஒரு நாயரோ ஒரு மேனனோ அது போன்றவர்களோ. இருப்பு ஆசிரியர், அரசியல் ஆசிரியர், பெருநகர ஆசிரியர் அனைவருமே மலையாளிகள்.
டைம்ஸ் ஆப் இந்தியாவில் முன்பு பணியாற்றிய ஒரு செய்தியாளர் இவ்வாறு கூறினார் : "செய்தி அறை மலையாளிகளால் நிரம்பி வழிகிறது. அவர்கள் எப்பொழுதும் தங்களிடையே மலையாளத்திலேயே பேசிக் கொள்வார்கள். மலையாள பண்பாட்டின் ஆதிக்கம் செலுத்தும் இருப்பு சென்னை அலுவலகத்தில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்"
டைம்ஸ் ஆப் இந்தியாவின் மற்றொரு முன்னாள் ஊழியர் இவ்வாறு கூறுகிறார்: "டைம்ஸ் ஆப் இந்தியாவின் தற்போதைய சூழல் என்னவெனில், தமிழர்கள் அங்கு நுண்ணிய சிறுபான்மையினராக உள்ளனர். நான் அங்கு இருந்தபோது, நானும் எனது சக பணியாளர் ஒருவரும், தமிழ்நாட்டின் நலன்கள் அலட்சியப்படுத்தப்பட்டாலோ ஒதுக்கப்பட்டாலோ அதை எதிர்த்து பல முறை வாதிட்டிருக்கிறோம்"
"தமிழர்களை பெரிதும் எரிச்சல்படுத்திய மற்றொரு நிகழ்வு என்னவெனில், டைம்ஸ் ஆப் இந்தியா தனது சென்னை அலுவலகத்தை ஓணத்திற்காக அலங்கரிக்க அனுமதித்த அதே வேளையில், தமிழ்ப் புத்தாண்டுக்காக அலங்கரிக்க அனுமதிக்க மறுத்தது. எங்களில் சிலர் அது குறித்து கேள்வி எழுப்பினோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை"
மற்றொரு மூத்த செய்தியாளர், டைம்ஸ் ஆப் இந்தியாவின் வாசகர் என்ற அளவில் மட்டுமே அதோடு தொடர்புடையவர், சென்னையில் உள்ள ஆங்கில ஊடகங்களின் நிலையை இவ்வாறு ஆய்வு செய்கிறார் : "தமிழ் மக்கள் மற்றும் அவர்களின் கீழான பண்பாடு எப்பவுமே ஆங்கில ஊடகங்களால் அலட்சியப்படுத்தப்பட்டே வந்துள்ளன. காரணம் அவற்றில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் செழுமை வகுப்புகளிலிருந்து வந்தவர்களாகவே உள்ளனர். இது தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வழங்கப்படும் முறை குறித்த ஒரு விதமான பெரும் பிரிவையே ஏற்படுத்திவிட்டது.
எளிமையான பின்னணியிலிருந்து வந்தவர்கள் கூட ஆங்கில நாளிதழ்களின் செய்தி அறைகளுக்குள் தங்களுக்கான வழியைக் கண்டறிந்து நுழைய முற்பட்டிருந்த போதும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் குரல் ஒடுக்கப்பட்டே வந்திருக்கிறது. 'தமிழர் பார்வை' என்பது தற்போதும் செழுமையான வகுப்பினரின் பார்வையாகவே உள்ளது. இது மாநிலம் குறித்த பல தவறான புரிதல்களை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு ஒரு சான்று என்னவெனில், தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற இடங்களில் உள்ள மக்கள், தமிழ் உணவு முறையோடு 'இட்லி, தோசை மற்றும் சாம்பாரை' தொடர்புபடுத்தி, தமிழ்நாட்டு மக்களின் பெரும்பான்மையினர் சைவ உணவு வழக்கம் கொண்டவர்கள் என்று நம்புகின்றனர். ஆனால் உண்மையில், தமிழ் மக்களில் மிகப் பெரும்பான்மையோர், மரபாகவே மாமிசம் உண்ணும் வழக்கும் உடையவர்கள்.
தமிழ்நாட்டோடு தொடர்புப்படுத்தப்படும் மற்றொரு பண்பாட்டுக் கூறு கர்நாடக இசையும் பரதநாட்டியமும். உண்மையில் இசையில் செவ்வியல் வடிவங்கள் மக்கள் தொகையில் அதிகபட்சம் 10 விழுக்காட்டினரால் மட்டுமே புரிந்து கொள்ளவும் பாராட்டவும் படுகிறது. அப்படியெனில் எஞ்சியுள்ள 90 விழுக்காட்டு மக்களின் இசை மற்றும் கலை மரபு என்ன?
அத்தகைய கலை வடிவங்கள் போதுமான அங்கீகாரம் பெறுவதில்லை. ஆங்கில ஊடகங்கள் அதை அங்கீகரிப்பதைப் பற்றி அக்கறை கொள்வதே இல்லை. ஏனெனில், பிற மாநிலங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள், குறிப்பாக உயர் நிலை ஆசிரியர் பொறுப்பில் உள்ளவர்கள், ஆதிக்கம் மிகுந்த செழுமையான வகுப்பினருடன் தொடர்பு கொள்வதை மட்டுமே விரும்புகின்றனர்.
முல்லைப் பெரியாறு விசயத்தைப் பொருத்தவரையில், மலையாள நாளிதழ்களின் துணையுடன் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கியது கேரள அரசே ஆகும். கேரள அரசின் முக்கிய நோக்கம் இடுக்கி அணையிலிருந்து நீர் பெறுவதே. அதனை அடைய வேண்டுமெனில் முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட வேண்டும்.
காலப் போக்கில், மாநில அரசின் 'நோக்கத்தை' உயர்த்திப் பிடிப்பதில் மலையாள நாளிதழ்கள் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டதில், அது ஒரு உணர்ச்சிகரமான விசயமாகி போனது. எனவே, முல்லைப் பெரியாறு ஒரு நீர் வெடிகுண்டு என்றே கேரளத்தில் உள்ள ஒவ்வொரு மலையாளியும் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாதபோதும், அணை எந்நேரமும் உடைந்து விடலாம் என்று மக்கள் இன்று நம்புகிறார்கள். இதையே கடந்த பல பத்தாண்டுகளாக சொல்லிக் கொண்டும் உள்ளனர்."
இந்த உணர்வுகளோடு பொருந்தி, மலையாள செய்தியாளர்களும் இதே பார்வையை கொண்டுள்ளனர். இதில், தற்போது தமிழ்நாட்டில் உள்ள ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் மலையாள செய்தியாளர்களின் வலிமையான கட்டுப்பாட்டில் இருப்பதால், எல்லா நாளிதழ்களும் கேரள தரப்பினையே கூறுகின்றன.
அணையின் உயரத்தை 152 அடியிலிருந்து 136 அடியாக மாற்றியது பிறப்பால் மலையாளியான எம்.ஜி.இராமச்சந்திரன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடந்தது. அன்று தலைமைச் செயலாளராக இருந்தவரும் ஒரு மலையாளியே.
மலையாளிகளின் உணர்வுகளுக்கு ஏற்ப, அணையின் பெயரை தவறாக 'முல்லாப் பெரியாறு' என்று தொடர்ந்து கூறும் டைம்ஸ் ஆப் இந்தியா தவிர, சென்னையின் நாளிதழான இந்துவும் அவ்வாறே உச்சரிக்கிறது.
மக்களின் அச்ச உணர்வை அதிகமாக்கி, முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதையே தனது ஒரே நோக்கமாகக் கொண்ட கேரள அரசின் கருத்தையே மலையாள செய்தியாளர்கள் எதிரொலிக்க முயலும்போது, ஊடகவியல் பாதிக்கப்படுகிறது. செய்தியின் நடுநிலைமை அடிவாங்குகிறது.
முல்லைப் பெரியாறு வலுவிழந்து உள்ளது என்றும் உடைந்து விடும் என்று உருவாக்கப்பட்டுள்ள கருத்தாக்கத்திற்கு நீண்ட பின்னணி உள்ளது.
1978-இல் நடந்த நிகழ்வுகளை நேரில் அறிந்தவரான சென்னையைச் சேர்ந்த ஒரு மூத்த செய்தியாளர் இவ்வாறு கூறுகிறார்: "மலையாள செய்திஏடுகளில் இருந்த செய்தியாளர்களில் மிக முக்கியமான இடத்தை உடையவரும், அக்காலத்திய அரசியல்வாதிகளுக்கு ஆலோசனை சொல்லக்கூடியவரும், அவர்களின் பெரும் ஆதரவைப் பெற்றவரும், திருவனந்தபுரத்திலிருந்து வரும் மலையாள மனோரமாவின் தலைமை பொறுப்பிலிருந்தவருமான திரு.பட்ரோஸ் சும்மாரால்தான் கேரளாவில் அனைத்தும் தொடங்கியது.
1976-இல் இடுக்கி அணை அமைக்கப்பட்ட நாளிலிருந்து தேவையான அளவு நீரை நான்கு பருவ காலங்களிலும் வழங்கவில்லை என்பது குறித்து ஏமாற்றமுற்று இருந்த அன்றைய கேரள மாநில மின்சாரத் துறை தலைமைப் பொறியாளரும் தற்போது கேரள அரசு ஆலோசகருமான எம்.பி.பரமேசுவரன் நாயருடன் அன்றைய கேரள காங்கிரஸ் தலைவர் கே.கருணாகரன் நடத்திய உரையாடலைத் தொடர்ந்து, கேரளாவில் அப்போது இருப்பதிலேயே அதிக அளவில் விற்பனையான நாளிதழான மனோரமா நாளிதழ் 1978இல் முதன் முதலாக 'முல்லைப் பெரியாறு போட்டான் போருன்னு' (முல்லைப் பெரியாறு வெடிக்கப் போகிறது) என்று தலைப்புச் செய்தி தாங்கி வந்தது.
முல்லைப் பெரியாறு இடுக்கிக்கு மேலணையாகும். கேரள எல்லைக்குள் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் மீது சட்டப்பூர்வ அதிகாரத்தை ஒரு ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாடு பெற்றிருந்தது.
பரமேசுவரன் நாயர் வேடிக்கையாக 'நம்முடைய சேட்டனிடத்து பரஞ்சு ஸ்டோரேஸ் கொறைக்க பரையானுல்லே' (நம்முடைய அண்ணன் - அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி்.ராமச்சந்திரன் - அவர்களிடம் சொல்லி அணையின் நீர் தேக்க அளவை குறைக்கச் சொல்வோம்) என்று காங்கிரஸ் தலைவரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
ஒரு வெற்று வேடிக்கைப் பேச்சாகத் தொடங்கிய அந்த உரையாடலின் இறுதியில் நாயர் காங்கிரசு தலைவரிடம் இவ்வாறு கூறுகிறார்: 'பேடி கிரியேட் செஞ்சிட்டு சேட்டனிடத்து போயல்லா' (முதலில் அச்சத்தை உருவாக்கிவிட்டு பின்னர் நம் அண்ணனிடம் அதை எடுத்துச் செல்ல வேண்டும்)
மலையாள மனோரமாவால் முதலில் உருவாக்கப்பட்ட 'அச்சம்' பின்னர் பிற மலையாள செய்திஏடுகளால் கையிலெடுக்கப்பட்டன. அந்த நீண்ட கதையை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், பிப்ரவரி 2006-இல் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒர் உத்தரவைப் பிறப்பித்தது. அதில் அணை வலுவிழந்து இல்லை என்றும் தமிழ்நாடு அரசு நீரின் தேக்க அளவை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் கூறியது.
இன்று ஒவ்வொரு மலையாளி செய்தியாளரும் பட்ரோஸ் சும்மாராக செயல்படுகிறார் என்பதுதான் வேதனையானது. இந்த வேதனை ஊடகவியலுக்கு மட்டுமல்ல உண்மைக்குமே. ஆனால் இந்த செய்தியாளர்கள் புரிந்து கொள்ளத் தவறியது என்னவெனில், அவர்களின் ஆதிக்க வெறி, இந்தியாவின் பன்முகத் தன்மையை கிழித்து எறிந்துவிடும் என்பதைதான்.
கொஞ்சம் நீருக்காகவும், பிரிட்டிஷ் இந்திய அரசு திருவனந்தபுரம் அரசரிடமிருந்து சட்டப்படி வாங்கிய நிலத்தை மீட்டெடுப்பதற்காகவும், கேரளாவைச் சேர்ந்த செய்தியாளர்கள் தங்களின் தொழில் நேர்மையை விட்டுக் கொடுக்க வேண்டுமா?
***
ராதிகா கிரி  - தி ஸ்டேட்ஸ்மேன் இதழில் சிறப்பு செய்தியாளராக உள்ளார்.
நன்றி: வீக் எண்ட் லீடர் (http://www.theweekendleader.com/Causes/853/The-M-factor.html#disqus_thread)
மொழிபெயர்ப்பு க்கு நன்றி கீற்று இணையதளம்.

Sunday, December 4, 2011


Silver Jubilee Mail Address

Dear Friends find the below the email address of Silver Jubilee Committe.

Invite your creations.

ywms.silverjubilee@gmail.com

வெள்ளிவிழா கொண்டாட்டம்

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 21 ஜனவரி 2012 அன்று நமது பள்ளியின் 25 வது ஆண்டு விழா கொண்டாட உள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்

நற்பணி மன்ற முன்னாள் உறுப்பினர்கள், இந்நாள் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பெற்றோர்கள், குறிப்பாக இந்த அமைப்பு நன்றாக வளர வேண்டும் என என்றென்றும் விரும்பும் உள்ளூர் வெளியூர் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் பேராதரவையும் அன்புடன் வரவேற்கிறோம்.
 
வெள்ளிவிழா குழு

Monday, May 2, 2011

தமிழனுக்கு இந்தி தேவையில்லையா? - கருணாநிதியின் துரோகம்!

ஆண்டாண்டு காலமாக திராவிட முன்னேற்ற கழகம் இந்தியை எதிர்த்து தமிழர்களின் அடிப்படை உரிமையை வேட்டையாடுவது பலரும் அறிந்த செய்தி. இந்தி எதிர்ப்புக்குக் கருணாநிதி விளக்கம் கூறும்போது, "நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை; இந்தி ஆதிக்கத்தையே எதிர்க்கிறோம்" என்கிறார். இது, "நெருப்பு சுடும்; அதனால் தமிழகம் முழுவதும் தீப்பெட்டியைத் தடை செய்யவேண்டும்" என்பது போல் இருக்கிறது.

கருணாநிதி இந்தியை ஏன் எதிர்க்கிறார், பிறகு ஏன் குழப்புகிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் கபில்சிபல் "அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழி பாடமாக்க வேண்டும்" என்று யோசனை தெரிவித்தார். உடனே தமிழக கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழகத்தில் இந்தியை அனுமதிக்க முடியாது" என்று பதில் அறிக்கை விட்டார். இந்த அறிக்கையின் உள் நோக்கம் கருணாநிதியை மகிழ்விக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன இருக்கமுடியும்?.

தமிழர்கள் ஒரு தேசிய மொழியைக் கற்பதில் தவறு என்ன? ஒரு படித்த கல்வி அமைச்சரே தனது தலைவர் திருப்திக்காக இந்தியை எதிர்ப்பது வேலியே பயிரை மேய்வது போல இருக்கிறது. ஒரு அமைச்சர் ஒரு அறிக்கை விடுவதற்கு முன்பு அதன் சாதக பாதகங்களை யோசிக்கவேண்டும். இன்று பிற மாநிலங்களில் இந்திமொழி உள்ளது; அவர்கள் எதில் குறைந்துவிட்டார்கள்? இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்கு நாம் சென்று அங்குள்ள ரிக்ஸா ஓட்டியிடம் ஆங்கிலம் பேசினால் அவனுக்கு என்ன புரியும்? நமக்கு தமிழையும், ஆங்கிலத்தையும் விட்டால் வேறு என்ன தெரியும்?.

நமது பக்கத்து மாநிலமான கேரளாவைச் சேர்ந்தவர்கள், செல்வம் கொழிக்கும் வளைகுடா பகுதிகளில் உயர்மட்ட வேலைகளிலிருந்து கீழ்மட்டம் வரை கோலோச்சும்போது, தமிழர்கள் பெரும்பான்மையோரும் அப்பாவிகளாக, கீழ்மட்டத்திலேயே தலையெடுக்க முடியாமல் நசிந்து போவதற்குக்மொழி மேலாண்மையும் ஒரு காரணம் என்பது வளைகுடாக்களில் பயணிக்கும் தமிழக அரசியல்வாதிகளில் எவருக்குமே இதுவரை புரியவில்லையா?

வெளிநாடுகளில் மட்டுமின்றி தமிழகத்திலும்கூட சில வேளைகளில் இப்பரிதாப தமிழன் மொழி புரியாமல் தன்னைத் தானே கேவலப்படுத்திக் கொள்கிறான். சான்றுக்குச் சில:

ஒரு வருட காலத்துக்கு முன்பு டிவி யில் ஒரு தமிழ் திரைபட நகைச்சுவை காட்சியைப் பார்த்து அதிர்ந்து போனேன். அந்தக் காட்சியில் ஒரு இந்தி வாசகம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அந்த வாசகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தால் மிக பயங்கரமான அச்சில் பதிக்கமுடியாத ஆபாச வார்த்தையாக இருந்தது. அப்போ இந்தத் தவறு எப்படி நடந்தது? தமிழ் சினிமாக்களின் தணிக்கை அதிகாரிகளுக்குக் கூட இந்தி தெரியவில்லை என்பதுதானே? அவர்களுக்கு இந்தி தெரிந்து இருந்தால் அந்த வாசகம் என்ன, காட்சியையே நீக்கி இருப்பார்கள்.

இந்தக் கொடுமை பாடல்களையும் விட்டுவைக்கவில்லை. சமீபத்திய தமிழ் பாடல் ஒன்றில் "படுவா" என்ற இந்தி சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது இதற்கு ஆங்கிலத்தில் PIMP (பிம்ப்) என்றும் தமிழில் "கூட்டிக் கொடுப்பவன்" என்றும் சொல்லலாம்! எவ்வளவு அசிங்கம். திரைப்படத்தின் மொழி தமிழ், பயன்படுத்தப்பட்ட சொற்கள், இந்தி மொழியிலுள்ள தரம்கெட்ட ஆபாச சொற்கள். ரசிப்பதும் சிரிப்பதும் தமிழர்கள்! ஆனால் அர்த்தம் மட்டும் தெரியாது! இத்தகைய படங்களின் பெயர்கள் தமிழில் இருந்தால் அரசு மானியம் வேறு! என்ன பரிதாபம்!!

மக்கள் விழிப்புணர்வு பெறவில்லை, அரசும் திருந்தவில்லை! நான் மட்டும் என்னசெய்வேன்?. மகா கவி அல்லாமா இக்பால் அவர்களின் அற்புத வரிகளில் ஒன்று உள்ளது, "நீங்கள் எந்த ஒன்றுக்கும் ஆசை படுவதற்கு முன்னால் அதற்கு உங்களை நீங்களே தயார்படுத்திகொள்ளுங்கள்". எவ்வளவு அருமையான சிந்தனை!

அரசியல்வாதிகள் பதவிக்கு ஆசைபடுகிறார்களே தவிர அதற்கு அவர்கள் தகுதியானவர்களாக இல்லை என்பதே உண்மை! உதாரணம் மத்திய அமைச்சர் அழகிரி! ஆங்கிலமும் தெரியாது, இந்தியும் தெரியாது! நாடாளுமன்றத்தில் பேசவும் பயப்படுகிறார். டெல்லி செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுக்கவும் பயப்படுகிறார். பதவியும் அதிகாரமும் இருந்து என்ன செய்ய? இதற்கு ஒரே தீர்வு, இந்தி மொழியைப் பள்ளியில் கட்டாயப் பாடமாக கொண்டு வரவேண்டும் என்பதுதான். அது அரசியல் கட்சிகளால்தான் முடியும்.

அரசியல் கட்சிகள் மக்களின் நலனுக்காகவே தவிர, மக்களின் சுயமரியாதையையும், அடிப்படை உரிமையையும் பிடுங்குவதாக இருக்கக்கூடாது என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும். இந்தத் தலைமுறை தொடங்கி, இந்தி கற்க ஆரம்பித்தால் எதிர்காலத்தில் தமிழர்கள் தமிழகம் தாண்டி பிழைப்பார்கள்! நமது வாழ்வாதாரமும் சிறக்கும் என்பதில் ஐயம் இல்லை என்பது என்னுடைய தொலை நோக்கு சிந்தனை. சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களா!

- கலீல், வீரசோழன்.

http://www.inneram.com/2011032915012/tamils-should-learn-hindi