Monday, July 21, 2008

பணம் பணமறிய அவா!

கவிதை
ஜாபர் ஸாதிக் பாகவி

பணம் பணமறிய அவா!

•அன்னை தேசத்து
அகதிகள் நாம்
எண்ணை தேசங்களில்
எறிந்து கொண்டிருக்கிறோம்!

•அடி வயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்
அறுத்தெறிந்து வீசிய
ஜீவனுள்ள
மாமிசத் துண்டுகள் நாம்!

•கண்தெரியாத தேசத்தில் விழுந்து
காயங்களில் தலை சாய்த்துக்
கண்ணீர் வடிக்கிறோம்!

•மொத்தக் குடும்பத்தையும்
முதுகில் சுமந்து
இன்னும் தீர்மானிக்கப்படாத
திசைகளில் தொடர்கிறது
நம் பயணம்!

•ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா
என்றுதான் கடிதம் எழுதுகிறோம்!
பணம் பணமறிய அவா
என்றல்லவா பதில் வருகிறது!

•நமக்கு மட்டும் ஏன்
பணம்
பந்த பாசங்களின்
சமாதியாகிவிட்டது?

•ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியாணியிலும்
முற்றுப்பெற்றுவிடுகிறது
நம் பெருநாட்கள் ஒவ்வொன்றும்....

•உயிரை பிழிந்து பிழிந்து
பாசத்தால் ஒத்தடம் தந்த
உறவுகளை பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள்
இந்த ஏகந்த வாழ்கை?

•கலவரத்தில்
கைக் குழந்தையைத் தொலைத்த
தாயின் பதற்றத்தைப்போல்தான்
ஒவ்வொரு முறையும் போன் பேசிய
பின்னால் அடையும் அவஸ்த்தைகள்...

•நம்மில் பலபேருக்கு
தாம்பத்திய வாழ்க்கைகூட
தவணைமுறையில்தான்
தட்டுப்படுகிறது…

•தொலைபேசியிலும்
தபாலிலும்
கொஞ்சலும், சிணுந்கலுமாய்…
இன்ஸ்டால்மெண்டில்
இல்லறம் நடக்கிறது.

•மனைவியின்
மூச்சுக் காற்று தந்த சுகம்கூட
இந்த ஏ.சி காற்று தருவதில்லை!

•குடும்ப விளக்குகளை
கும்மிருட்டில் தவிக்கவிட்டு
தீக்குச்சிகள் நாம்
தன்னந்தனியாய்
இந்த தீவுக்களில்…

•வீடுகூடும் நிஜம் தொலைந்து
ஒரு வீடு கட்டும் கனாவில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்த பாலைப் பிரதேசங்களில்…?

•உயிரோடு இருக்கும்
பெற்ற குழந்தைக்கு
புகைப் படத்தில்தான்
கொடுக்க முடிகிறது
செல்ல முத்தங்கள்…!

•என்ன இருந்தாலும்
காகிதங்கள் உணருமா
பாசத்தின் ருசி?

•ஒவ்வொரு முறையும்
ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் எல்லாவறையும்
எடுத்து வர முடிகிறது
மனசைத் தவிர…!

•காலத்தின்
இந்த பசை தடவல்கள்
நம்மைக் கட்டிப்போடாமல்
வெறும் கடிதம் போடத்தானா?

•பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கிறோம்!
தண்ணீருக்காக அல்ல
தபால்களுக்காக…

•வாழ்கையின் பாதி
விரக்தியிலும், விரக தீயிலும்
எறிந்துபோகும் நம் வாலிப வாழ்க்கை
கடைசியில் நரம்புகள் அறுந்துபோய்
முகாரி பாடும் வீணைகளாய்…

•என்ன சொல்லி
என்ன பயன்
தண்ணீரில் மீன் அழுதால்
கண்ணீரை யார் அறிவார்?


நன்றி: இமான் வெள்ளி விழா மலரிலிருந்து


அகமது கபீர்
கோவிந்தகுடி

Friday, June 20, 2008

ஸ்டெம் செல

ஸ்டெம் செல்லின் குணாதிசயமே இப்படி நம் உடம்பிலுள்ள இறந்த செல்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் என்பதுதான்!.. நம் உடலில் பல உறுப்புகளும், நரம்புகளும், திசுக்களும் இருந்தாலும் இந்த அதிசய சக்தி `ஸ்டெம் செல்'லுக்கு மட்டுமேதான் இருக்கிறது! எல்லாவகையான கேன்சர்கள், இதய நோய், வாத நோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய், தெலசீமியா எனப்படும் பிளட் டிஸார்டர், தோல் வியாதிகள் என்று மனித குலத்துக்கு சவால் விடும் எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட வியாதிகளை ஸ்டெம் செல் மூலம் குணப்படுத்த முடியும் என்கிறார்கள்!

ஸ்டெம் செல் குறித்து சென்னை அரசு பொது மருத்துவமனையின் இரத்த வங்கி மற்றும் ஸ்டெம் செல் வங்கியின் தலைமைப் பொறுப்பில்இருக்கும் டாக்டர் செல்வராஜனிடம் கேட்டோம். முதலிரண்டு பாராக்களில் நாம் சொன்ன இரண்டு கேஸ்களிலும் ஸ்டெம் செல்லை உபயோகித்து அந்த கேஸ்களை சக்ஸஸ் செய்தவர் இவர்தான்!

``ஒரு பெண், கர்ப்பமாகும்போது தாய்க்கும் சிசுவுக்கும் இணைப்புப் பாலமாக அமைவதே தொப்புள் கொடிதான். அந்தப் பெண், குழந்தையை பிரசவிக்கும் போது தொப்புள் கொடியை அறுத்து எறிந்துவிடுகிறோம். ஆனால், அந்தத் தொப்புள் கொடியிலிருந்து சேகரிக்கப்படும் இரத்தத்தில் இருந்துதான் விலை மதிப்பற்ற ... நம் உயிரை எதிர்காலத்தில் பாதுகாக்கும் `ஸ்டெம் செல்கள்' எடுக்கப்படுகின்றன! தொப்புள்கொடி தவிர, நம் உடம்பின் வேறு பாகங்களில் இருந்தும்கூட ஸ்டெம்செல்லைப் பிரித்தெடுக்க முடியும்!

கடந்த முப்பது வருடங்களாக எலும்பு மஜ்ஜையிலிருந்தும் ஸ்டெம் செல்லை எடுத்துச் சேகரிக்கிறார்கள். எலும்புகளிலிருந்து ஸ்டெம் செல்லை எடுப்பதென்பது சற்றே சிக்கலான விஷயம். எலும்புகளில் குத்தி எடுக்கும்போது,ஸ்டெம் செல்லில் சிதைந்த எலும்பின் சிறு துகள்களும்,திசுக்களும் கலந்து இருக்கும். இதிலிருந்து ஸ்டெம் செல்லைப் பிரித்தெடுத்து உபயோகப்படுத்த வேண்டும். இந்த முறையில் ஸ்டெம் செல்லைப் பிரித்தெடுக்க ரத்தமும் அதிகம் தேவைப்படும்! எலும்பு மஜ்ஜையிலிருந்து 2,500 மி.லி இரத்தம் எடுக்கப்பட்டு அதிலிருந்து ஸ்டெம் செல்லைப் பிரித்தால் 150 மி.லி. மட்டுமே கிடைக்கும்.

தவிர, எலும்பு மஜ்ஜையிலிருந்து ஸ்டெம் செல்லை எடுக்க வேண்டும் என்றால், ஆபரேஷன் தியேட்டரில் வைத்து மட்டுமே எடுக்க முடியும். மயக்க மருந்து தந்துதான் எடுப்பார்கள். ரத்தம் தந்த பின்பும் ஐந்தாறு நாட்கள் மருத்துவ மனையிலேயே தங்க வேண்டி இருக்கும்! 2,500 மி.லி. இரத்தம் ஸ்டெம் செல்லுக்காக எடுக்கப்படுவதால் நம் உடம்பில் இரத்தத்தின் அடர்த்தியும் குறைந்து விடும். அதனால் அந்த நபருக்கு உடனே இரண்டு அல்லது மூன்று யூனிட் இரத்தம் ஏற்ற வேண்டி வரும்.

ஸ்டெம் செல்லில் ஒரு விசேஷம் என்னவென்றால், தன் உடம்பின் ரத்தத்தில் இருந்தே சேகரிக்கப்படும் ஸ்டெம் செல்லை, தனக்கே பாதிக்கப்பட்ட உடலுறுப்புக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்! அல்லது ரத்தம் பொருந்திப் போகும் டோனர் களிடம் இருந்தும் எடுக்கலாம்.

`ஸ்டெம் செல்' என்பது முதிர்ச்சி அடையாத ரத்த வெள்ளை அணுக்களின் (White Blood Cell) ஒரு வகை செல். எல்லா வகையான இரத்தம் சார்ந்த செல்களும் நம் எலும்பு மஜ்ஜையிலிருந்துதான் உருவாகிறது. உடம்பில் நிறைய எலும்புகள் இருந்தாலும் பெரும்பாலும் ஸ்டெம் செல் நம் இடுப்பெலும்பிலிருந்துதான் எடுக்கப்படுகிறது.

இந்தமுறை மிக கஷ்டமானது என்பதால், சமீப காலமாக மிக நவீன இயந்திரம் மூலம் ஸ்டெம்செல் சுலபமாக பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த அதி நவீன இயந்திரம்,ரத்தத்தை அந்த நபரிடம் இருந்து எடுக்கும்போதே ஆன் லைன் மூலம் தனித்தனியே பிரித்தெடுப்பதால், அந்த மிச்ச ரத்தம் அப்போதே வேறொரு டியூப் மூலம் மறுபடி அவர் உடலுக்குள்ளே திருப்பி அனுப்பி விடுகிறது. இரண்டிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் இந்த முறையில் ஸ்டெம் செல்லைப் பிரித்தெடுக்க முடியும். இதற்கு அந்த நபர் மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

தவிர, ஸ்டெம் செல்லை எடுப்பதற்கு முன்னால் நம் உடம்பில் இரத்த அணுக்களை எலும்பு மஜ்ஜையில் அதிக அளவில் உற்பத்தி செய்ய ஒரு மருந்தையும் (CSF)ஊசி மூலம் உடலுக்குள் ஐந்து நாட்கள் செலுத்துவோம்.சாதாரணமாக ஒரு மனிதனுக்கு வெள்ளை அணுக்கள்7000 முதல் 10000 வரை இருக்கும். இந்த ஊசி செலுத்திய பிறகு அதாவது ரத்த அணுக்களின் உற்பத்தி 35,000 முதல் 1,20,000 வரைஅதிகரிக்கும். அதிலிருந்து ஸ்டெம் செல்லைப் பிரித்தெடுக்க 2500 மி.லி. இரத்தத்தை எடுப்பது சற்று சுலபம்!

நமது சென்னை அரசு மருத்துவமனையிலேயே எலும்பு மஜ்ஜை மற்றும் ரத்த நாளங்களில் பெறப்படும் ரத்தத்தில் இருந்து ஸ்டெம் செல் பிரித்தெடுக்கும் அதிநவீன `செல் செபரேட்டர்' கருவி உள்ளது. இதன் விலை 18 லட்ச ரூபாய். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அரசுவங்கியில் ஸ்டெம் செல்லை சேகரித்தால்,சேகரிப்பவருக்கு மட்டுமல்லாமல்,யாருக்கெல்லாம் இரத்தம் ஒத்துப்போகிறதோ அவர்களுக்கும் அந்த ஸ்டெம்செல் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறிப்பாக, பிஞ்சு வயதில் குழந்தைகளுக்கு வரும் தெலசிமியா எனப்படும் ப்ளட் டிஸார்டர் நோய்களுக்கு இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

நம் உடலின் வெவ்வேறு உறுப்புகளின் ரத்தத்திலிருந்து ஸ்டெம் செல்கள் உருவாக்கப்பட்டாலும் அதிக தரமும், மிக எளிமையான வழிமுறைகளும் கொண்டது தொப்புள்கொடி ரத்தத்திலிருந்து பெறப்படும் `ஸ்டெம் செல்'தான்! அம்மாவிடமிருந்து குழந்தையின் தொப்புள் கொடி மூலம் செல்லும் இந்த `ஸ்டெம் செல்'மூலம்தான் ஒரு உயிரே உருவாக்கப்படுகிறது என்பதால், உடலின் உறுப்புகளை உற்பத்திசெய்யும் விசேஷ செல்களும்,குரோமோசோம்களும் இதில் உள்ளன. சிகிச்சையின்போது இறந்த செல்களை ரீஜெனரேட் செய்வது இந்த செல்கள்தான் என்று சொல்லப்படுகிறது. இது குறித்த மேலும் பல அறிவியல் ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.

பிறக்கும் போதே ஒரு குழந்தையின் ஸ்டெம் செல்லை சேகரித்து வைத்தால் எதிர்காலத்தில் அந்த குழந்தை ஏதாவது வியாதியினாலோ, விபத்திலோ சிக்கி உடல் உறுப்புகளை இழக்க நேரிட்டால், பாதிக்கப்பட்ட அந்த உடல் உறுப்பில்,ஸ்டெம் செல்லை செலுத்தும்போது அந்தஇடத்திற்குக்குண்டான செல்கள் அங்கே வளரும். உதாரணமாக, மூளைச் செல்கள் இறந்து போனால், அந்த இடத்தில் ஸ்டெம் செல்லை செலுத்தும்போது, புதியதாக மூளைச் செல்கள் உருவாகும். அதனால்தான் ஸ்டெம் செல் ஒரு லிவ்விங் செல், அதாவது வாழும் செல் எனப்படுகிறது.

ஒரு குழந்தை பிறக்கும் போதே நீரிழிவு நோயோ, அல்லது எய்ட்ஸ் கிருமிகளோ அல்லது வீரியமுள்ள ஜெனிடிக் டிஸார்டர் நோய்க்கானவாய்ப்புகளோ இருந்தால் மட்டும் அந்தக் குழந்தையின் தொப்புள் கொடியிலிருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்லை பயன்படுத்த முடியாது'' என்கிறார் டாக்டர். செல்வராஜ்.

KUMUDAM

Saturday, June 14, 2008